விழிப்புணர்வு : செல்போனை இதயம், இடுப்பு அருகே வைக்கலாமா?

செப்டம்பர் 16-30 2019

இன்றைக்கு, சிறு நகரங்களில்கூட ‘குழந்தையின்மைக்கான சிகிச்சை மய்யங்கள்’  (Fertility Centres) முளைத்துவிட்டன. பத்தாண்டுகளுக்கு முன்னர் இல்லாத அளவுக்கு இப்போது இந்த மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. பெண்களுக்கு இணையாக ஆண்களும் சிகிச்சைக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ‘லேப்டாப்’, ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்துவதுகூட ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தலாம்’ என்று அண்மையில் ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

“ஆண்களுக்கு மலட்டுத் தன்மை வருவதற்குப் பல காரணங்கள் உண்டு. புகைபிடித்தல்கூட ஒரு காரணம். வெப்பம் அதிகமாக இருக்கும் சூழலில் பணிபுரிபவர்களுக்கும் இந்தப் பிரச்சனை ஏற்படலாம். உதாரணமாக, ஆடை உற்பத்தித்துறையில் பணிபுரியும் ஆண்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. ஆண்களுக்கு விதைப்பைகள் இயற்கையாகவே உடலுக்கு வெளியே அமைந்திருக்கின்றன. அவற்றால் அதிக வெப்பத்தைத் தாங்க முடியாது என்பதால் அதிக வெப்பமான சூழலில் பணிபுரிவோருக்கு விந்து உற்பத்தி பாதிக்கப்படும்.

லேப்டாப்பை மடியில் வைத்தபடி வேலை பார்க்கும்போது அதிலிருந்து வெளியாகும் வெப்பம் விதைப் பைகளைப் பாதிக்கும். அதன் காரணமாக ‘லேப்டாப்’ பயன்படுத்தும் ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, வெப்பமான சூழலை ஆண்கள் முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

இந்தப் பிரச்சனை குறித்து பாலியல் மருத்துவர் காமராஜ் கூறுவதாவது:

“நம் உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும்; விந்துப்பைகளின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும்.

ஆரோக்கியமான ஆண்களின் விந்துப்பைகளுக்கு ரத்தம் கொஞ்சம் குறைவாகவே செல்லும். அவர்களின் விந்துப்பைகளின் வெப்பநிலையும் 35 டிகிரி செல்சியஸாகவே இருக்கும். விந்துப்பைகளை, `விந்துத் தொழிற்சாலை என்றே சொல்லலாம். ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட ஒரு கோடி அணுக்கள்வரை உற்பத்தி செய்துகொண்டே யிருக்கும். லேப்டாப்பை மடியில் வைத்துக் கொண்டு மணிக்கணக்கில் வேலை பார்க்கும் போது, அதிலிருக்கும் பேட்டரி சூடாவதால் வெளியாகும் வெப்பம் விந்துப்பைகளைப் பாதிக்கும். இது நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மை. எனவே, லேப்டாப்பில் தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யக் கூடாது. அதேபோல வெப்பத்தை அதிகம் வெளிப்படுத்தும் பெரிய இயந்திரங்களில் வேலை பார்ப்பவர்கள், லாரி ஓட்டுநர்கள், பாய்லரில் பணிபுரிபவர்கள்… என எல்லோருக்குமே இந்தப் பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

அதிக தூரம் மோட்டார் சைக்கிளில் செல்லுபவர்கள், சைக்கிளை அதிகம் பயன்படுத்துபவர்கள்கூட கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இருபக்கமும் காலைத் தொங்கப்போட்டபடி உட்காரும் வாகன இருக்கை,  ( Saddle Seat) மிகவும் கடினமாக இல்லாமல் மென்மையானதாக இருக்க வேண்டும். ஏனென்றால், அடிவயிற்றுக்குக் கீழே ‘புடெண்டல் ஆர்ட்டரி’  (Pudendal Artery) என்னும் ரத்தநாளமும் நரம்புகளும் இருக்கும். இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அவற்றின் மேல் நம் மொத்த எடையையும் வைத்து, அழுத்தி உட்கார்ந்திருப்போம். அதனால், ஆணுறுப்புக்கும் விந்துப்பைக்கும் ரத்த ஓட்டம் குறைவாகச் செல்லும். விந்தணுக்கள் குறையும். விரைப்புத் தன்மையும் குறைய வாய்ப்பிருக்கிறது.

செல்போனைப் பொறுத்தவரை அதன் இயக்கத்துக்கு மின்காந்த அலைகள் இன்றியமையாதவை. அவை ‘விந்தணுக்களைக் கண்டிப்பாகப் பாதிக்கும்’ என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். பல மணி நேரம் செல்போனைப் பயன்படுத்துபவர்கள், விந்துப்பைகளுக்கு அருகே பேன்ட் பாக்கெட்டில் செல்போனை வைத்திருப்பவர்கள் ஆகியோர் மின்காந்த அலைகளால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். அதை விந்தணுக்களின் ‘மார்பாலஜி’  (Morphology) என்று சொல்வோம். அதாவது, அவை உருச்சிதைவில்லாத அணுக்களின் எண்ணிக்கையை மிகவும் பாதிக்கும். எனவே, செல்போனை அதிகம் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். பேன்ட் பாக்கெட்டில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும். லேப்டாப்பை மேஜையின் மீது வைத்துப் பயன்படுத்துவது நல்லது. லேப்டாப்பை மடிமேல் வைத்துப் பயன்படுத்தக் கூடாது. அதேபோல அதிக சூடான நீரில் குளிப்பது, `சோனா பாத்’  (Sauna Bath) எனப்படும் நீராவிக் குளியல் எடுப்பது இவையும் விந்தணுக்களின் உற்பத்தியைக் குறைக்கும். எனவே, அவற்றைத் தவிர்க்கவும்.

குளிர்பானங்கள், உணவுகள்கூட ஆண்களுக்கு ஏற்படும் இந்தக் குறைபாட்டுக்கு ஒரு காரணமாகலாம். பாட்டிலில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் குளிர்பானங்கள் மூன்று, நான்கு மாதங்களுக்கு கெட்டுப் போகாமலிருக்க தண்ணீரிலும் குளிர் பானங்களிலும் சில பூச்சிக்கொல்லி மருந்துகளை, பதப்படுத்தும் பொருள்களைச் (Preservatives) சேர்க்கிறார்கள்.

உண்ணும் உணவிலும் வேண்டும், எச்சரிக்கை!

ஊறுகாய், பழம், காய் போன்றவை கெடாமல் இருக்க இரசாயனங்களைச் சேர்க்கின்றனர். இவற்றை உண்ணுவதன் மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. எனவே, இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

ஊறுகாய் தொடங்கி எந்த உணவுப் பொருளை வேண்டுமானாலும் இன்றைக்கு இந்த முறையில் பதப்படுத்திவைத்துச் சாப்பிட முடியும். இப்படிப் பதப்படுத்துவதற்காகச் சேர்க்கப்படும் பல ரசாயனப் பொருள்கள், ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடும்; பாலியல் சிக்கலை உருவாக்-குகின்றன.

பழங்களும் காய்களும் கெட்டுப்போகாமலிருக்க, பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கிறார்கள். இந்தப் பூச்சிக்கொல்லிகளாலும் விந்தணுக்கள் குறையலாம். அண்மையில்கூட ஒரு பெரிய நிறுவனம் தயாரித்த நூடுல்ஸில் `பதப்படுத்தும் பொருள்கள் அளவுக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்கிற பிரச்சனை எழுந்தது. இன்றைக்குத் தயாரிக்கப்படும் எல்லா உணவுப் பொருள்களிலும் குளிர்பானங்களிலும் பூச்சிக்கொல்லி மருந்துகள் சேர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலமாக நாம் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் நச்சுப்பொருள்களைச் சேர்த்துக்கொண்டிருக்கிறோம்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *