ராமனுக்குச் சீதை சகோதரியே – ரொமிலாதாபர்

மார்ச் 01-15

சமஸ்கிருதத்தில் உள்ள வால்மீகி இராமாயணம், பாலி மொழியில் ஜடாகா கதைகளில் உள்ள புத்தமதக் கதை, பாமாகாரியம் என்னும் பிராகிருத மொழியில் உள்ள ஜைனமதக் கதை – ஆகியவற்றை ஒப்பிட்டுக் காட்டியுள்ளார் வரலாற்றுப் பேராசிரியர் ரொமிலாதாபர். அவை :

  • கி.மு. 400 முதல் கி.பி. 400 வரையிலான 800 ஆண்டு காலத்தில் வால்மீகியின் ராமாயணக் கதைக்கு பல இணைப்புகள், இடைச்செருகல்கள் செய்யப்பட்டன.  எடுத்துக்காட்டாக, ராமரின் கணையாழியை ஹனுமான் சீதையிடம் கொடுப்பதான கதை, பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது என்று வரலாற்றாசிரியர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.  இத்தகைய இணைப்புகள், இடைச் செருகல்கள் எல்லாம் அந்தந்தக் காலகட்டத்தில் சமூகத்தில் நிலவிய கண்ணோட்டங்களைப் பிரதிபலிப்பவையாக உள்ளன.
  • புத்தமதக் கதையில், தசரதன் பனாரஸ் அரசர் என்றுதான் கூறப்பட்டுள்ளதே தவிர, அயோத்தி அரசர் என்று குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.  ராமர், லட்சுமணன், சீதா அனைவரும் தசரதரின் முதல் மனைவிக்குப் பிறந்த உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் ஆவர்.  தனது இரண்டாவது மனைவியிடமிருந்து காப்பாற்றுவதற்காக அரசர் மூன்று பேரையும் இமயமலைக்கு நாடு கடத்தி விடுகிறார்.  12 ஆண்டுகளுக்குப் பின் இந்த மூவரும் நாட்டுக்குத் திரும்பி வந்து ராமரும், சீதாவும் இணையாக ஆட்சி செய்கின்றனர்.  சீதாவைக் கடத்திச் செல்லும் கதை இதில் காணப்படவில்லை.
  • பரதன் ராமரைக் காட்டில் சந்தித்து, நாட்டுக்குத் திரும்பி வரும்படிக் கேட்டுக் கொள்ளும்போது, வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றிய புத்த மதத்தின் கொள்கைகளையும் அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துவது கதையில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • வால்மீகி இராமாயணமே சரியானது என்பதை நிலைநாட்டுவதிலேயே 19 ஆம் நூற்றாண்டு வரலாற்றாசிரியர்கள் கவனம் செலுத்தினர். யார் இராமாயணக் கதையை எழுதுகிறார், ஏன் எழுதுகிறார், அப்போதிருந்த சமூகத்தின் இயல்பு என்ன என்ற கேள்விகள், கதையில் உள்ள தனிப்பட்ட பாத்திரங்கள் வரலாற்று நாயகர்களா என்ற கேள்வியைவிட முக்கியமானவை.

(புதுச்சேரியின் ஆரோவில்லியில் உள்ள ஆதிசக்தி நாடகக் கலை ஆய்வு மய்யம் ஏற்பாடு செய்திருந்த இராமாயண விழாவில் ஆற்றிய பேருரையிலிருந்து).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *