அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (275)

ஆகஸ்ட் 16-31,2021

திராவிடர் கழகம் ஒரு திறந்த புத்தகம்!

கி.வீரமணி

தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் கோ.அரங்கநாதனின் இளைய மகன் ஆர்.அண்ணாதுரைக்கும், நடராசனின் மகள் என்.கஜலட்சுமிக்கும் வாழ்க்கை ஒப்பந்த வரவேற்பு விழா 15.12.1996 அன்று சென்னை இந்திரா நகர் சமூக நலக் கூடத்தில் நடைபெற்றது. மணவிழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச் சிறப்புரையாற்றினேன். தாம்பரம் மாவட்டக் கழகச் சார்பில் வாழ்த்து மடல் அளிக்கப்பட்டது. விழாவில் கழகத்தின் பொறுப்பாளர்களும், அழைப்பாளர்களும் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சமூகநீதி மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்வு டிசம்பர் 26 அன்று காலை 9:00 மணிக்கு பெண்ணுரிமை மாநாடு என்னும் கருத்தமைவில் கலை நிகழ்ச்சியும், பெண்கள் நலம் சார்ந்த முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பின்னர், பெண்கள் கருத்தரங்கம் பல்வேறு தலைப்புகளில் கழகப் பொறுப்பாளர்கள், உரை நிகழ்த்தினர். மாலை 4:00 மணிக்கு திராவிடர் கழக மாநில மாநாடு என்னும் பொருளின் கீழ் கழகப் பொறுப்பாளர்கள் வழிமொழிய தமிழர் நலன் சார்ந்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாலை மாநாட்டு மேடையிலே ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெற்றன. அதில், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் வளர்க்கப்பட்ட தந்தை பெரியார் _ அன்னை மணியம்மையார் ஆகியோரின் செல்வி ஈ.வெ.ரா.ம.அமலா மணி அவர்களுக்கும், தஞ்சை மாவட்டம் உம்பளப்பாடி மணமகன் ம.அண்ணாதுரை அவர்களுக்கும், பசும்பொன் மாவட்ட தி.க. செயலாளர் சாமி.திராவிடமணி _ செயலெட்சுமி ஆகியோரின் செல்வன் என்னாரெசு பிராட்லா, காரைக்குடி சொக்கலிங்கம் _சரசுவதி ஆகியோரின் செல்வி ஜான்சிராணி அவர்களுக்கும், சேலம் மாவட்டம் மின்னக்கல் வை.பழனிச்சாமி _ லெட்சுமி ஆகியோரின் செல்வன் ப.செல்வகுமார், திருச்சியைச் சேர்ந்த இரத்தினம்_பானுமதி ஆகியோருடைய செல்வி மணிமேகலை ஆகியோருக்கும், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக பிரதிநிதி மு.இரா.இளங்கோவின் தம்பியும், காஞ்சிபுரம் மு.இராமசாமி _ இரா.தனலட்சுமி ஆகியோர்களுடைய செல்வன் மு.இரா.சேகர், காஞ்சிபுரம் மணி _ நீலா ஆகியோருடைய செல்வி ம.லதா ஆகியோர்களுக்கும் ஒரே மேடையில் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்தேன். அய்ந்து திருமணங்களும் ஜாதி மறுப்புத் திருமணங்களாகும். இத்திருமணங்களில் தாலி அணிவிக்கப்படாதது ஒரு தனிச் சிறப்பாகும். அனைவருடைய கைத்தட்டல்களுக்கிடையே மண விழா நிறைவு பெற்றது.

அதனைத்தொடர்ந்து அய்ம்பெரும் பெரியார் தொண்டர்களை சிறப்பித்து பரிசு வழங்கினேன். மயிலாடுதுறை கோ.அரங்கசாமி, மாநில தி.க. மகளிரணிச் செயலாளர் க.பார்வதி, சேலம் அப்பாய், கண்கொடுத்த வனிதம் கண்பார்வையற்ற பிச்சையன், மறைந்த டோல்கேட் பிச்சை சார்பாக அவரது மகள் சிந்தனைச் செல்வி ஆகியோருக்கு செயராமன் _ சகுந்தலா அறக்கட்டளை சார்பாக சால்வைகளை அணிவித்து, தந்தை பெரியார் உருவம் பொறித்த மோதிரத்தை மக்கள் கடலின் ஆரவாரம் _ கைத்தட்டல்

களுக்கிடையே அணிவித்தேன். பெரியார் பெருந் தொண்டர்களைப் பாராட்டி உரையாற்றுகையில், “ஒவ்வொருவருடைய சிறப்பையும், அவர்களின் இயக்க ஈடுபாட்டையும், எப்படி குடும்பமாகத் தன்னை இணைத்துக் கொண்டு கழகத்திற்கு உழைத்த மேன்மைகளைக் குறிப்பிட்டு அவர்களை வாழ்த்தினேன். இன்று இந்த இயக்கத்தை விட்டு யாராவது ஓடுகிறார்கள் என்று சொன்னால், இந்த இயக்கத்திலே இருந்து எதையும் எடுத்துப் பழக்கப்பட முடியவில்லையே என்பதற்காக ஓடுகிறார்களே தவிர வேறு இல்லை. இந்த இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லக் கூடியவர்கள் பல முனைகளிலே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தொண்டாற்றக்கூடிய பெரியார் பெருந் தொண்டர்கள் பலரும் இன்னும் கழகத்திற்காக உழைத்து வருகின்றனர். அவர்களைச் சிறப்பிக்க வேண்டிய நமது கடமை, அவர்களே இயக்கத்தின் ஆணி வேர்கள்! எனவேதான், இவர்களைப் பாராட்டுவதிலே, நான் பெருமிதம் கொள்கிறேன். அவர்கள் எனக்கு இட்ட கட்டளையை இதன் மூலமாக நிறைவேற்றுவதிலே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்’’ என பல கருத்துகளைக் கூறி உரையாற்றினேன். அதன்பின் பெரியார் கொள்கைகளை பெரியார் அஞ்சல் வழிக் கல்லூரியில் பயின்று பட்டயம் பெற்றவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கும் விழாவும் நடைபெற்றது.

மாநாட்டில் கலந்துகொண்டு தோழர்களை உற்சாகப்படுத்தி வந்த சிறப்பு அழைப்பாளர் இனமுரசு சத்யராஜ் அவர்கள் சிறப்புரையாற்றுகையில், “நான் இங்கே வருவதற்கு முன்னால் மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டிருந்த பெரியார் அறிவியல் கண்காட்சியைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். அங்கே விஞ்ஞான உண்மைகளை எவ்வளவு எளிமையாக _ சிறப்பாக அந்த மாணவிகள் விளக்கினார்கள். அதைப் பார்க்கும்போது எனக்கு அய்யா வீரமணி அவர்கள் மேல் ஓர் நன்றி உணர்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் அந்த மாணவிகளை அவர்கள் எப்படி வளர்த்திருக்கிறார்கள் என்ற நினைத்து வியந்து போனேன். தந்தை பெரியார் மாதிரி தீர்க்கதரிசி உலகத்திலே வேறு எவரும் கிடையாது. நீ நன்றாக நடித்தாலும் உனக்குச் சிறந்த நடிகர் என்ற பட்டம் கிடைக்காது. அதனால்தான் உனக்கு ‘சிவாஜி கணேசன்’ என்கிற பட்டம் கொடுக்கிறேன் என்று தந்தை பெரியார் சொல்லிப் பட்டம் கொடுத்தார். எதிர்காலத்தை

முன்கூட்டியே கணிக்கக் கூடிய திறமை பெரியாருக்கு அப்பொழுது இருந்திருக்கிறது. இன்றைக்கு அவர் எழுதி வைத்த விஞ்ஞானக் கருத்துகள் எல்லாம் நடைமுறைக்கு வருவதை நாம் பார்க்கிறோம். அவர் என்னென்ன சொன்னாரோ அவையெல்லாம் நடந்துகொண்டு வருகின்றன. மக்களுக்கு உங்களைப் போல் தொண்டு செய்கிற_ தியாகம் செய்கிற தோழர்களைவிட சினிமாவில் நடிக்கிற எங்களுக்கு போராடும் குணம் குறைவு. எங்களை விட நீங்கள் பெரிய தியாகிகள் _ வீரர்கள். இந்தக் கடவுள் நம்பிக்கைதான் மூடநம்பிக்கைகள் எல்லாவற்றுக்கும் ஆணிவேராக இருக்கிறது.

நாட்டில் ஜாதிக் கலவரம் உருவாவதற்குக் காரணமே மதத் தலைவர்கள்தான். இந்த மதத்துக்கெல்லாம் தலைவன் கடவுள்தான். அதனால், அந்தக் கடவுளை ஒழித்தால்தான் எல்லாப் பிரச்சினைகளும் தீரும். நாட்டில் சாமியார்களுக்கெல்லாம் தடை விதிக்க வேண்டும். ஏனெனில் சாமியார்கள் கஞ்சா, அபினைவிட பெரிய போதையைக் கொடுக்கிறார்கள். அது தெரிந்தும் அவர்கள் பின்னாலே மக்கள் போகிறார்கள். இதனைப் புரிந்து கொண்டது பெரியார் புத்தகங்களைப் படித்துத்தான். பெரியார் கொள்கைகள் மீது நான் ஈடுபாடு கொண்டதற்குப் பிறகுதான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். யாராவது ஒருவர் தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க முன்வந்தால், அந்தப் படத்தில் நான் காசு வாங்காமல் நடித்துக் கொடுப்பேன். (பின்னர், பெரியார் திரைப்படத்தில் நடித்தும் சிறப்புக்குரியவரானார்.) பெரியார் வேடத்தில் என்னைப் பார்த்துவிட்டேன் என்றால் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி அடைவேன். இது நடந்தே தீரும்’’ என்பதைப் போன்ற கருத்துகளை மாநாடு மூலமாக சிறப்புரையாற்றினார்.

எனது உரையில், “இங்குக் கூடியிருக்கும் குடும்பம் எவ்வளவு நெருக்கமான குடும்பம். எவ்வளவு பகுத்தறிவுள்ள குடும்பம், கொள்கைகளுக்காக தங்களை அழித்துக் கொள்கின்ற கருப்பு மெழுகுவத்திகளாக இருக்கின்ற குடும்பம் என்பதை நிலைநாட்டக் கூடிய வகையில் கடந்த மூன்று நாள்களாக இடையறாமல் தொடர்ந்து இங்கே நாம் குழுமியிருக்கிறோம். அதற்கு முதற்கண் என்னுடைய நன்றியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். அருமை நண்பர்களே! அடுத்து வரக்கூடிய இருபத்தி ஓராம் நூற்றாண்டு நம்முடைய அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களுடைய நூற்றாண்டுதான் என்பதை நாம் உலகுக்கு எடுத்துக்காட்டப் போகின்றோம். ஒரு வெளிநாட்டுக்காரர் என்னை வந்து சந்தித்தார். உங்களுடைய இயக்கத்திலே எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று கேட்டார். அதை அவ்வளவு சுலபமாகச் சொல்ல முடியாது என்று எண்ணிவிட்டு, எங்களுடைய இயக்கத்திலே இரண்டு விதமான உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்று சொன்னேன். கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்கள் ஒரு வகை; கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர்கள் மற்றொரு வகை என்று சொன்னேன். அவர் அதிர்ந்து போய் நீங்கள் ஏதாவது இரகசிய இயக்கம் வைத்திருக்கிறீர்களா என்று கேட்டார். இல்லை, இரகசிய இயக்கத்திலே எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எங்கள் தலைவர் தந்தை பெரியார் அவர்களிடம் எந்த இரகசியமும் கிடையாது.- எங்களுடைய இயக்கம், எங்களுடைய கொள்கை ஒரு திறந்த புத்தகம். அதனால்தான் எங்களுடைய இயக்கத்தை எதிரிகளாலும், துரோகிகளாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. நாங்கள்  பாராட்டை எதிர்பார்ப்பவர்கள் அல்ல; நன்றி எதிர்பாராமல் தொண்டாற்றுபவர்கள்’’ என்றேன்.

இந்த மாநாடு எனக்கு வயதைக் கூட்டவில்லை, வயதைக் குறைத்திருக்கிறது என்பதை மெத்த பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். கழகத்தின் தொய்வில்லாப் பணியின் மூலம் டெல்லியில் தந்தை பெரியார் கொள்கை புன்முறுவல் பூக்கிறது. இன்னும் நிறைய பணியிருக்கிறது. வருங்காலத்தில் இயக்கத்திற்கு புதிய இளைஞர்களைக் கொண்டுவர வேண்டியுள்ளது. மகளிரின் பங்களிப்பையும் அதிகப்படுத்த வேண்டும். ஜனவரியில் கிராமப் பிரச்சாரத் திட்டத்தை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். மக்களிடையே புதிய பிரச்சார உத்திகளை ஏற்படுத்தி இயக்கத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்லவேண்டும். எனக்கு உங்களைப் பார்க்கையில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. இன்னும் உங்களுக்காக உழைத்து, உங்களை என்னுடையே தோளிலே தூக்கிச் சுமப்பதற்கு உரிமை பெற்றவன் என்ற முறையிலே அந்த வலிமையோடு உழைக்கின்றேனே அதில்தான் எனக்கு மகிழ்ச்சி. சிலர் இயக்கத்தைக் கொச்சைப்படுத்தலாம், விலக்கப்பட்டவர்களை வைத்து வியாக்கியானம் செய்யலாம், வழக்கு மன்றத்திற்குப் போகலாம் என்று நினைத்தால் அதைச் சந்திப்பதற்கு இந்தப் படை எப்போதும் தயாராக இருக்கிறது.அப்படி நினைப்பவர்கள் வெற்றி பெற முடியாது. உங்களுக்குப்பின்புலம் எது? எங்கே இருந்து வருகிறது என்பது எங்களுக்குத் தெரியும். மிக நன்றாகவே தெரியும். எனவேதான்

தந்தை பெரியார் இட்ட -_ விட்ட பணிகளை முடிக்க எந்த நம்பிக்கை என் மீது வைத்திருக்கின்றீர்களோ அந்த நம்பிக்கையை என்னுடைய இருதயத்தின் கடைசி துடிப்பு இருக்கின்ற வரையிலே, என்னுடைய உடலில் கடைசி மூச்சு இருக்கின்ற வரை காப்பாற்றுவேன் என்பதைத் தவிர வேறு என்ன நான் உங்களுக்

கெல்லாம் சொல்ல இருக்கிறது. நண்பர்களே, நம்முடைய பயணங்கள் முடிவதில்லை. காரணம், நம்முடைய நியாயங்கள் தோற்பதில்லை. வெற்றி நமதே! வீறுகொண்டு நடைபோடுவோம்’’ என உலகளவில் பெரியாரின் தேவையும் ஆற்ற வேண்டிய பணிகளையும் எடுத்துக் கூறி நிறைவு செய்தேன். மாநாட்டு வரவேற்புக் குழு செயலாளர் பா.தெட்சிணாமூர்த்தி நன்றி உரையாற்றினார்.

திராவிடர் கழகம் டிசம்பரில் நடத்திய சமூகநீதி மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்த உலக மனிதநேய அமைப்பின் உறுப்பினரான லெவி ஃபிராகல் அவர்கள் நார்வே சென்ற பின், மாநாட்டு நினைவுகளை எண்ணி பெருமகிழ்ச்சி கொண்டு,

நமது பணியினைப் பாராட்டும் வகையில் ஒரு கடிதத்தினை 9.1.1997 அன்று கழகத்திற்கு அனுப்பினார். அதில்,

அன்புள்ள திரு.வீரமணி,

திசம்பரில் 23, 26 ஆகிய நாள்களில் நான் சென்னை வந்திருந்தபோது, தாங்கள் என்னிடம் காட்டிய அளவற்ற அன்புக்காகவும், விருந்தோம்பலுக்காகவும் நான் என்னுடைய ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

பகுத்தறிவாளர்கள் / மனித நேயப் பற்றாளர்களின் ஒரு நிகழ்ச்சி அமெரிக்கா அல்லது அய்ரோப்பாவில் இல்லாமல் இந்தியாவில், உலக அளவில் மிகச் சிறப்பான வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது வித்தியாசமாக இருக்கிறது.

தங்களையும், தங்கள் தமிழக மக்களையும் மீண்டும் சந்திக்கவும், தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் தங்கள் பணி குறித்து முழுமையாக அறியவும் ஆர்வமாக இருக்கிறேன். நான் அங்குத் தங்கியிருந்த காலத்தில் மிகுந்த அக்கறையுடன் என்னைக் கவனித்துக் கொண்ட திரு.போகா அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

அன்புடன்,

லெவி ஃபிராகல் திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளர் கலி.பூங்குன்றன் அவர்களது தமக்கையர் ஆயப்பாடியைச் சார்ந்த இராசேசுவரி, சிங்கப்பூர் ஓ.டி.மூர்த்தி ஆகியோரின் செல்வன் தெ.வீரமணிக்கும், விழுப்புரம் டி.சந்திரசேகரன், சுமதி ஆகியோரின் செல்வி உமாவுக்கும் வாழ்க்கை ஒப்பந்த விழாவை 19.1.1997 அன்று பொறையாறு சியாமளா கோவிந்தசாமி திருமண மண்டபத்தில் தலைமையேற்று நடத்தி வைத்தேன். கவிஞர் கலி.பூங்குன்றன் மணவிழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விழாவில் பெரியார் பெருந்தொண்டர்கள் சிங்கப்பூர் தி.நாகரத்தினம், எம்.ஆர்.சந்திரன், திருமதி விஜயகுமாரி ஆகியோர் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்கள். விழாவில் சிறப்புரையாற்றுகையில், சுயமரியாதைத் திருமணத்தின் அவசியத்தையும், தந்தை பெரியாரின் கொள்கைகளையும் எடுத்துக் கூறினேன். விழாவில் ஏராளமான பொதுமக்களும், கழகப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அடுத்து மதுரையில் நடைபெறும் திருமணத்திற்குப் புறப்பட்டேன்.

சுயமரியாதைச் சுடரொளி மதுரை ஓ.வி.கே.நீர்காத்தலிங்கத்தின் பேத்தி மணவிழா 20.1.1997 அன்று மதுரை ஜஸ்டிஸ் வி.ஆர்.கிருஷ்ண அய்யர் கம்யூனிட்டி ஹாலில் நடைபெற்றது. மணமக்கள் ஓ.வி.கே.என். அறிவுச் செல்வம், அ.சித்ரா ஆகியோருடைய செல்வி சுஜிபிரியா அவர்களுக்கும், மதுரை ஆர்.சந்திரசேகரன், சி.மல்லிகா ஆகியோரின் செல்வன் சி.வெங்கடேஸ்ராஜ் அவர்களுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதி மொழியினைக் கூறச் செய்து மணவிழாவினை நடத்தி வைத்து சிறப்புரை யாற்றினேன். மணவிழாவில் கு.வெ.கி.ஆசான், சி.மகேந்திரன், பேராசிரியர் காளிமுத்து, அ.இறையன், ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், திருமகள் இறையன் மற்றும் ஏராளமான மாவட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டுக்கு அருகிலுள்ள ஒக்கநாடு மேலையூரில் அய்யா சிலை திறப்பு விழா மற்றும் கிராமப்புற பகுத்தறிவு மாநாடு 21.1.1997 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது. அதில் மகிழ்ச்சியோடு கலந்துகொண்டேன். பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்ட பொதுக் கூட்ட மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களது முழு உருவச் சிலையை மக்களுடைய வாழ்த்தொலி முழக்கங்களுக்கிடையே, அதிர்வேட்டு ஒலிக்க திறந்து வைத்தேன்.

காலை முதலே கிராமப்புற பகுத்தறிவு மாநாடு துவங்கி மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கமும், நாடகமும் சிறப்பாக நடைபெற்றன. மாநாட்டின் ஒரு பகுதியாக குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது. அதில் அரவிந்த் என்ற சிறுவனுக்கு பெரியார் செல்வம் என்றும், வீதி நாடக நடிகர் தெற்கு நத்தம் வேம்பையன் ஆண் மகனுக்கு தமிழ்ச் செல்வன் எனவும், சாந்தியின் பெண் மகவுக்கு மணியம்மை எனவும், முத்துலெட்சுமி, முருகேசன் ஆகியோருடைய ஆண் குழந்தைக்கு அறிவுச்செல்வம் எனவும், பெரியார் மணி _ சாந்தா ஆகியோருடைய பெண் மகவுக்கு அன்புமணி எனவும் பெயர் சூட்டினேன். மாநாட்டு நிகழ்ச்சிகளை மாநில இளைஞரணிச் செயலாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், மாவட்ட துணைத் தலைவர் வை.குப்புசாமி ஆகியோர் சிறப்பாக அமைத்திருந்தனர். அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் விழாக் குழுவிற்கு சால்வைகளை அணிவித்தேன். நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு 10 மூடை நெல்லை கிராமப்புற மக்கள் சார்பாக விழாக்குழுவினர் வழங்கினர். மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

பூந்தமல்லி சுந்தர் திருமண மண்டபத்தில் வழக்குரைஞர் இரெ.பழனியப்பன் _ டாக்டர் சரோஜா ஆகியோரின் மகன் வழக்குரைஞர் இரவிசங்கர், பெங்களூர் டாக்டர் லதா ஆகியோரது வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவின் வரவேற்பு நிகழ்ச்சியில் 27.1.1997 அன்று கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன். பெரியார் பெருந்தொண்டர் தி.நாகரத்தினம், இரத்தின நடராசன், வெங்கடாசலம், ‘அரிமா’ ரெங்காச்சாரி ஆகியோரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி, பாராட்டினர்.

(நினைவுகள் நீளும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *