மூடநம்பிக்கை : நாடி ஜோதிடம் உண்மையா?

2022 மற்றவர்கள் ஜுலை 16-31 2022

ஒளிமதி

ஜோதிடத்தையும் நம்பி, கடவுள், விதி, பிறவி இவற்றையும் நம்புவது முரண்பட்ட நிலையாகும்.
இப்படிச் சொன்னால், சிலர் சாமர்த்தியமாக, கடவுள் பூர்வஜென்ம பலனுக்கு ஏற்ப நம் விதியை அமைத்து அதற்கேற்ற கிரகச் சூழ்நிலையில் நம்மைப் பிறக்கச் செய்கிறான்; அந்த விதியை நம் கையில் ரேகையாகப் பதித்து வைத்திருக்கிறான் என்று கூறி, கடவுள் நம்பிக்கையோடு ஜோதிட நம்பிக்கையையும் இணைத்து முடிச்சுப் போட்டுப் பேசுவர்.
மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவ்வாறு கூறியும் உள்ளார்.
“ஒருவரை ஆணாகவோ பெண்ணாகவோ பிறக்கச் செய்ய வேண்டிய தகப்பனாருடைய உடலில், அதற்குரிய அணுப் பிரமாணமுள்ள அதிசூக்குமமான வித்தைச் செலுத்தி, முன்னர் அவருடைய வினைகளுக்குத் தகுந்த தலையெழுத்தை ஆணுக்கு வலது உள்ளங்கையிலும், பெண்ணுக்கு இடது உள்ளங்கையிலும் சுருக்கெழுத்துப் போன்ற ரேகைகளாகப் பொறித்து, இன்ன ஊரில், இன்ன ஜாதியில், இன்ன பெற்றோருக்கு, இன்ன பெயரோடு, இன்ன விநாடியில் இன்னின்ன கிரகநிலையில் பிறக்க வேண்டும் என்று கடவுளே தீர்மானித்து அதன்படி பிறக்கச் செய்து, அவர் இட்ட பெயரையே இடும்படியாகவும், அவரவர் செய்த புண்ணிய பாவத்திற்கேற்ப இன்ன இன்ன இன்ப துன்பம் அனுபவித்து வருமாறும் ஆட்சிபுரிந்து வருகிறார்’’ என்று மதுரை ஆதினகர்த்தர் கூறுகிறார். (அர்த்தமுள்ள இந்துமதம், பாகம்_1, பக்கம்_118, 119)
முற்பிறவி கர்மவினைக்கேற்ப கடவுள் அமைக்கும் விதியின்படியே ஒருவர் வாழ்வு அமையும் என்ற கடவுள் கோட்பாட்டிற்கு, பிறக்கும் கிரக நிலைக்கேற்ப ஒருவர் வாழ்வு அமையும் என்ற ஜோதிடக் கோட்பாடு முரண் என்பதால் இரண்டையும் இணைத்து இவர் கூறியுள்ள கருத்து முற்றிலும் தவறு ஆகும்.
எனவே, ஜோதிட நம்பிக்கையோடு கடவுள், விதி, பிறவி, நம்பிக்கையை இணைப்பது தவறு.
கிரகங்களின் இயக்கத்திற்கு ஏற்பவே வாழ்வு அமைகிறது என்றால், கிரகங்கள் ஒரே மாதிரியாகக் காலங்காலமாய் இயங்கிக் கொண்டிருக்கும்போது, மனித வாழ்வும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், மனித வாழ்வு காலத்திற்குக் காலம் மாறிக் கொண்டிருக்கிறதே!
சமைத்துண்ணத் தெரியாது, விலங்கு போல மனிதன் வாழ்ந்த காலத்தில் எப்படிக் கிரகங்கள் இயங்கினவோ அப்படியே இன்றைக்கும் இயங்குகின்றன. ஆனால், மனிதன் அப்படியா வாழ்கிறான்?

எத்தனையோ மாற்றம்! எத்தனையோ புதுமை! எத்தனையோ புரட்சி! ஏன், அந்தக் கிரகங்களுக்கே கூட மனிதன் செல்கிறான்!
எனவே, கிரகங்களின் இயக்கத்திற்கும் மனித வாழ்க்கை அமைவதற்கும் சம்பந்தமே இல்லை.
ஒருவன் கொலை செய்கிறான் என்றால், அதற்குக் கிரக இயக்கம் காரணம் என்றால் அந்த நேரத்தில் பிறந்த அத்தனை பேருமா கொலை செய்கிறார்கள்?
அதேபோல், ஒருவர் கொலை செய்யப்படுகிறார் என்றால், கொலையுண்டவர் பிறந்த நேரத்தில் பிறந்த அனைவரும் கொலை செய்யப்படுவதில்லையே?
ஒருவன் கொலை செய்கிறான் என்றால், அவன் ஜாதகத்தில், இவன் இன்னாரை, இன்ன நாளில் கொலை செய்வான் என்று இருக்கிறதா?
இன்னாரால் இவன் இன்ன நாளில் கொலை செய்யப்படுவான் என்று கொலை செய்யப்பட்டவனின் ஜாதகத்தில் அமைப்பு இருக்குமா?
இன்னாரால் கொலைசெய்யப்படுவோம் என்று தன் ஜாதகத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டு அவனிடமிருந்து இவன் தப்பிக்க முடியுமா?
அப்படித் தப்பிக்க முடியுமென்றால், அந்தக் கிரகத்தின்படி கொலை நிகழாமல் எப்படியிருக்க முடியும்? கொலை நிகழாமல் தவிர்த்துவிட்டால் ஜாதகம் பொய்யென்று ஆகிவிடாதா?
ஒருவன் பாம்பு கடித்து இறக்க வேண்டும் என்று ஜோதிட அமைப்பு இருந்தால், ஆயிரம் பாதுகாப்பு இருந்தாலும் அவன் பாம்புக் கடியிலிருந்து தப்ப முடியுமா?
தப்ப முடியாது எனில், ஜோதிடப்படிதான் நடக்கும் எனில், நாம் ஏன் வாழ்வைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்? பாதுகாப்பாக வாழ ஏன் முயற்சிக்க வேண்டும்?
நம்மால் எதையும் மாற்றியமைக்க முடியாது எனில், ஜோதிடம் ஏன் பார்க்க வேண்டும்?
சுருங்கச் சொன்னால், பிறக்கின்றபோது உள்ள கிரக நிலைப்படி வாழ்க்கை அமைகிறது என்றால், உலகில் ஒரே மாதிரி வாழ்வு கொண்ட பலர் இருக்க வேண்டும். அவ்வாறு யாரும் இருப்பதில்லை.

எனவே, கிரக நிலையை வைத்துக் கணிக்கப்படுகின்ற ஜோதிடம் தவறானது. அது மட்டுமல்ல; ஜோதிட நம்பிக்கையும் கடவுள் பிரார்த்தனையும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நம்பிக்கைகள். ஜோதிடப்படிதான் வாழ்வு என்றால், பிரார்த்தனையால் எப்படி மாற்ற முடியும்? பின் ஏன் கடவுள் வழிபாடு? கிரக நிலைக்கேற்பத்தான் வாழ்வு என்றால் கடவுளுக்கு என்ன வேலை? ஜோதிடத்தை நம்புகின்றவர் கடவுளை நம்பக் கூடாது.
பரிகாரம் மோசடியல்லவா?
கிரக நிலைக்கு ஏற்ப வாழ்வு அமைகிறது என்று சொல்லிவிட்டு, பின் பரிகாரங்கள் கூறுவது மோசடியல்லவா? பரிகாரம் செய்தால் கிரக அமைப்பு எப்படி மாறும்? சிந்திக்க வேண்டாமா?

நாடி ஜோதிடம்:
ஜோதிட மோசடியின் உச்சகட்டம் நாடி ஜோதிடம். ஓலைச் சுவடியில் ஒவ்வொருவரைப் பற்றிய குறிப்பும் எழுதி வைக்கப்-பட்டிருப்-பதாகக் கூறி, அவற்றுள் பொருத்தமானதைத் தேடியெடுத்து, படித்துக் காட்டி ஜோதிடம் சொல்வது நாடி ஜோதிட முறையாகும்.
இதில் கந்தர் நாடி, காக்கையர் நாடி, கவுசிகர் நாடி, சிவசிந்தாமணி, புஜண்டர் மகாவாக்கியம், கன்ம காண்டம், சப்தரிஷி நாடி, அநாகத வேதம் என்ற பல பிரிவுகள் உண்டு.
நாடி ஜோதிடத்தின் அடிப்படைத் தந்தி

 

 

ரமே இதுதான். எப்படி ‘மந்திர வித்தை’ காட்டுகிறவன் எந்தவொன்றையும் மறைத்துச் செய்கிறானோ அதேபோல், இதில் உண்மைப் பெயர் வெளிப்படையாக இல்லாமல், மறைமுகமாகச் சொல்லப்படுவதால், யாருக்கு வேண்டுமானாலும் பொருந்தச் செய்யலாம்.
மறைத்து அல்லது மறைமுகமாகச் செய்யப்படுகிற அல்லது சொல்லப்படுகிற எந்தவொன்றிலும் சூழ்ச்சியுள்ளது _ ஏமாற்று உள்ளது என்பதுதான் பொருள்.
நாடி சாஸ்திரம் குறித்துக் கண்ணதாசன் தனது ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ முதல் பாகத்தில் குறிப்பிட்டுள்ளவற்றை இதற்கு உதாரணமாகக் காட்டலாம்.
நாகர்கோயிலில் ஸ்ரீ ஆறுமுக நாவலருடைய நாடி சாஸ்திர ஏட்டில், அவருடைய பெயரை ‘அய்ந்தும் ஒன்றும் வதனமெனப் பெயரும் சூட்டி’ என்று கண்டிருந்தது.
அய்ந்து + ஒன்று = ஆறு; வதனம் என்றால் முகம்; ஆறுமுகம் என்பது ஆண்டவன் இட்ட பெயர்.

ஸ்ரீவைகுண்டத்திலுள்ள ஒரு கத்தோலிக்கக் கிறித்துவ அன்பருக்கு, ‘சாவில் ஆறும், சாவில் ஒன்பதும் இவன் தன் நாமம்’ என்று கண்டிருந்தது.
‘சா’ என்ற எழுத்து வரிசையில் ஆறாவது எழுத்து ‘சூ’ ஒன்பதாவது எழுத்து ‘சை’ அவரது தந்தையிட்ட பெயர் ‘சூசை’ என்பதாகும். ஆண்டவன் இட்ட பெயரும் சூசையாகும்.
ஓர் இந்துவைப் போல் மாறுவேஷம் போட்டுக்கொண்டு சென்ற மதுரையைச் சேர்ந்த இஸ்லாமியருக்கு ‘அப்துல் ரஹ்மான்’ என்று கூறப்பட்டிருக்கிறது.
ஓர் ஆங்கிலேயர் பார்த்தபொழுது ‘முழத்தில் பாதி இவர்தன் நாமம்’ என்றிருந்தது. அவரது பெயர் ஜான் என்பதாகும்.
கோவையில் கவுமார மடத்தை நிறுவிய தலைவருக்கு ‘இராமக்குட்டி’ என்றும் பின் துறவு பூண்டு ‘இராமானந்தர்’ ஆவார் என்றும் கண்டிருந்தது.
(அர்த்தமுள்ள இந்துமதம், பாகம்_1, பக்கம்_120)
(தொடரும்…)